Search This Blog

May 17, 2024

வலிகளை விலக்கும் வழி?

வலிகளை விலக்கும் வழி?

"வலியுடன் வாழக் கற்றுக்கொள்" என்ற என் பாடலைப் பதிவிட்ட பின் பல நண்பர்கள் , வலி நீக்குவதற்கு பல விதமான  வழிகளை எனக்குச் சொன்னார்கள். ஆயுர்வேதம், ஹோமியோபதி, அக்குபங்சர், மெடிடேஷன் , ரேக்கி  என்று இத்யாதி இத்யாதி அறிவுரைகள்! "எல்லாமே என் வலி தீர வேண்டும்" என்ற நல்லெண்ணத்துடன் கூறப்பட்டாலும், எதை பின்பற்றுவது என்ற குழப்பத்தில் என் தலை சுற்றியது! 

இது குறித்து ஒரு பாடல்!

அன்புடன் 

ரமேஷ் 









வலிகளை  எளிதாய் விலக்கிடும்  வழிகளை  

பலரும் உரைப்பார்  பரிந்து - நம்நலனை 

விரும்பி   அவர்தரும் யோசனை எல்லாம்

அரிதாம் செயல்முறை யாக்க !


மேலை நாட்டு மருத்துவங் கள்எதுவும்  

வேலைக்கு ஆகாது என்பார் -காலையும்  

மாலையும் ஆயுர் வேதத்தின் எண்ணெயை 

தோலின்மேல் தேய்த்தூறச் சொல்வார் 


ஹோமியோ பதிதான் ஒரேவழி  இதற்கென்று

சாமிமேல் சத்தியம் செய்வார்- பூமியில்

நிகரிதர்க் கில்லை நிச்சயம் இதுவெனப் 

பகருவார் பலருமிங் குண்டு                                                                   பகருவார்= சொல்லுவார்


வயதான பின்னே வலிகள் வருவது 

இயற்கையே பொறுத்திடெனக்  கூறித் - தயங்காமல் 

நானெழுதிய பாட்டை# எனக்கே மேற்காட்டி 

தேனொழுக ஆறுதல் சொல்வார்


*நுண்துளைக் குத்தூசி **தொடுகைப் பரிகாரம் 

^ உள்மன தறிதுயில்  சிகிச்சை - வேறு 

எண்ண அலைநிறுத்தி ^^ ஆழ்நிலைத் தியானம்

என்றுபல பரிகாரம் உரைப்பார்                                                       


வலிநீக்க  பற்பல  மருத்துவ வகைகளை 

பலருமே பரிந்தெனக் குரைக்க  - எந்த

வகையைநான்  பின்பற்று வேனென்று எண்ணியே  

திகைத்தே தலைசுற்றி நின் றேன். 


# - வலியுடன் வாழப் பழகிவிடு  என்ற எனது கவிதை. இதை 

https://kanithottam.blogspot.com/2024/05/blog-post.html என்ற இணைப்பில் காணலாம்.

* நுண்துளைக் குத்தூசி = accupuncture 

**தொடுகைப் பரிகாரம் = Reiki 

^ உள்மன தறிதுயில்  சிகிச்சை = Hypnosis 

^^ ஆழ்நிலைத் தியானம் = meditation 










  

May 13, 2024

வலியுடன் வாழக் கற்றுக்கொள்

  வலியுடன் வாழக் கற்றுக்கொள் 

சென்ற இரு மாதங்களாய் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து தாக்கி வலியால் அவதிப்படும் ஆற்றாமையில் எழுதிய ஒரு பாடல். 

அன்புடன் 

ரமேஷ் 





வலியுடன் வாழக் கற்றுக்கொள் 


வயது எழுபதை எட்டிய பின்னர் 

-----வலிபல  வந்து நமை வாட்டும் 

பயணத்தில் இறுதிப் பகுதியில் இருக்கையில் 

-----பலவகை நோய்கள்  நமைச் சேரும் 

            வலிகள் இல்லா  வாழ்க்கை என்பது  

            வாய்ப்பது மிகமிகச் சிலருக்கே -  

            விதியை நினைத்து வலியைப் பொறுத்து 

            வலியுடன் வாழக் கற்றுக்கொள் 


உடல்திடம் குறைந்து இடர்படும் நிலையும்

-----நிச்சயம் நேர்ந்திடும் முதியவர்க்கு - பல 

இடங்களில்  உடலினில் கடும்வலி கண்டிடும் 

-----ஆண்டுகள் மிகப்பல ஆனவர்க்கு 

தலைவலி கால்வலி கைவலி மெய்வலி 

-----முதுகு வலியோடு மூட்டுவலி -எனப் 

பலவகை வலிகள் ஒன்றன்பின் ஒன்றாய் 

-----வரவே வரிசையில் காத்திருக்கும்  

            வலிகள் இல்லா  வாழ்க்கை என்பது  

            வாய்ப்பது மிகமிகச் சிலருக்கே -  

            விதியை நினைத்து வலியைப் பொறுத்து

            வலியுடன் வாழக் கற்றுக்கொள் 


மருந்து மாத்திரை வேளை  தவறாமல் 

-----தினம்தினம் நாமே விழுங்கிடினும் 

சிறந்த மருத்துவர் சொல்லும் அறிவுரை 

-----கேட்டே நாளும் நடந்தபி(ன்)னும் 

விரும்பி உ(ண்)ணும்பல உணவு வகைகளை 

-----விலக்கி முற்றும் துறந்த பி(ன்)னும் 

துரிதமாய் நம் வலிகளுக்  கேயோர் 

-----தீர்வு என்றும் வருவதில்லை  

            வலிகள் இல்லா  வாழ்க்கை என்பது  

            வாய்ப்பது மிகமிகச் சிலருக்கே -  

            விதியை நினைத்து வலியைப் பொறுத்து            

            வலியுடன் வாழக் கற்றுக்கொள் 




   



Apr 6, 2024

சனிப் பிரதோஷப் பாடல்-

சனிப் பிரதோஷப் பாடல்- 

இன்றைய பதிவு ஒரு மீள் பதிவு.

சென்ற பதிவின் போது போது பாடலை ஒலிப்பதிவு  செய்யவில்லை. இப்போது பாடல் ஒலியுடன்!

அன்புடன் 

ரமேஷ் 


இன்று பிரதோஷம். 

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானது.

அன்று இறைவனை வணங்குபவர்களுக்கு பலமடங்கு அதிகமாக பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த சனிப்பிரதோஷ மகிமைபற்றி ஒரு பாடல்.

\அன்புடன்

ரமேஷ் 


சனித்தினத் துடன்இணைந்து சேர்ந்துவந்த தாலொரு
தனித்துவத் துடன்விளங்கும் சனிப்ரதோஷ வேளையில்
பனித்தசடைப்   பரமன்பாதம் பணிந்துபோற்றி வணங்குதல்
துணிக்கும்  பிறவித்தளைகளை ! இனிக்குமிந்தப்  பிறவியும் !

Mar 26, 2024

வாக்குச் சாவடிகள்

வாக்குச் சாவடிகள்

தேர்தல் ஜுரம் சூடு பிடிக்கத்  தொடங்கிவிட்டது. ஆளுக்கு ஆள் வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசுகிறார்கள்.  தேர்தல் முடிவுகள் வந்தபின்பு எவருக்கும் இந்த வாக்குறுதிகள் நினைவுக்கு இருப்பதில்லை. மக்களும் கேள்வி கேட்பதில்லை. அவர்களுக்குப் பழகிவிட்டது. வாக்குச் சாவடிக்குக் சென்று வோட்டுப் போடுவதோடு சரி.

இந்த ஒட்டுப் போடும் இடத்திற்கு ஏன் " வோட்டுச் சாவடி" என்று பெயர் வந்தது? இது பற்றி ஒரு வித்தியாசமான பொருள் விளக்கம் - ஒரு வெண்பா வடிவில்!

படித்துச் சிரியுங்கள்!!

அன்புடன் 

ரமேஷ் 






வாய்க்கெல்லாம்  வந்தபடி வாக்குறுதி கள்வீசி

வாய்க்கரிசி போட்டுவாக் காளர் களைவாங்கி

"சாவடிப்ப தாலே"தான் ஓட்டிடும் பந்தற்கு*                *ஓட்டிடும் பந்தல்= polling booth 

"சாவடி" என்றே பெயர்.

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)



Mar 18, 2024

நாவிதனின் கடையினிலே

நாவிதனின் கடையினிலே 




என் தலை நிறைய முடி இருந்தது ஒரு காலம். அப்போதெல்லாம் முடி திருத்தும் நிலையம் செல்லும்போது, எப்படி எப்படி முடி திருத்த வேண்டும்  என்று  முடிதிருத்துபவருக்கு விவரமாக அறிவுரை கூறுவதுண்டு. 

ஆனால் இப்போதோ தலையில் முடி எங்கே என்று தேடவேண்டி இருக்கிறது.  ஆனாலும் "இப்படிச் செய், அப்படிச் செய்"என்று அறிவுரை கூறுவதை நிறுத்த முடிவதில்லை. இதைக்  கேட்டு நாவிதரும், பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்து இருப்பவர்களும் வாய் விட்டுச் சிரிக்காததுதான் குறை!

இந்த நிலைமை பற்றி ஒரு பாடல்!

அன்புடன் 

ரமேஷ் 

வகிடெடுத்து வக்கணையாய் வாரிவந்த  காலம்போய் 

துகிலிழந்து துயருற்ற தோகைமயில் போலாகி 

சிகையிழந்து சிறிதளவே சிரத்தினில் இருக்கையிலே  

"வகையாக வெட்டிவிடு, ஜாக்கிரதை" எனக்கூறி 

நகைப்புக்கு உள்ளானேன் நாவிதனின் கடையினிலே! 


Mar 13, 2024

பள்ளிக்கு அனுப்பும் படலம்

பள்ளிக்கு அனுப்பும் படலம்

நான் இப்போது  தங்கி இருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் காலை ஏழு மணி அளவிலேயே குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்துவிடும். அவற்றில் தத்தம்  குழந்தைகளை ஏற்றிவிட தாய் தந்தையர் கூட்டமாக   வந்து காத்திருப்பார்கள். சில  சமயங்களில் பேருந்தைப் பிடிக்க சற்று கால தாமதமாக புறப்பட்ட பெற்றோர் புத்தகப்பை, உணவுப் பை சகிதமாக, ஓடி வருவதும் , குழந்தைகளோ சிறிதும்  கவலையின்றி பின்னல் மெதுவாக வருவதும் ஒரு கண்கொள்ளாக் காட்சி!
இதை விவரித்து ஒரு பாடல்- ! 

அன்புடன் 
ரமேஷ் 



புதிதாய் வாங்கிய புத்தகம் அடைத்து
-----பிதுங்கும் பையோ தொங்குது முதுகில்!
மதியத் துணவு அடைத்தொரு  பெட்டி
-----அதனுடன்  கூட அருந்தநீர்க் குடுவை
மிதச்சூட்  டோடுபால் நிரப்பிய   பிளாஸ்க்கு
-----இடைவே ளுக்கோ   தேன்பழத் துண்டு-இவ் 
விதம்பல  நிறைத்த பையொரு  தோளில்- பெண் 
-----போட மறுத்த காலணி   கையில்!
பதைத்து  பள்ளிக் கூட வண்டியை
------பிடிக்க முன்னால் ஒடும் தந்தை!


 

சற்றும் இதையே சட்டை செய்யாமல்
பத்தடி  பின்னால்  பதைப்பெதும் இன்றி
பாதை யோரத்து செடியில்  பூத்த
பட்டாம் பூச்சியை  எட்டிப் பிடித்துக் கை
கொட்டிச் சிரிக்கும்  குறும்புக் குழந்தை .




















Mar 8, 2024

சிவராத்திரிப் பாடல்

 சிவராத்திரிப் பாடல்

 


சிவசிவசிவ சிவசிவசிவ சிவசிவவெனும் மந்திரம் 

துயில்துறந்து இந்தநாளின் இரவுப்பொழுது முழுவதும்

பயிலுவோர்க்கு புண்ணியங்கள் பலவும்வந்து வாய்த்திடும்; 

கயிலைநாதன் கருணையாலே கேட்டயாவும் கிட்டுமே ! 


அன்புடன் 

ரமேஷ்